Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர குடிசைப் பகுதிகளில் முன்னோடி சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

Print PDF

தினமணி 12.11.2009

நகர குடிசைப் பகுதிகளில் முன்னோடி சுகாதாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

புதுச்சேரி, நவ. 12: நகர குடிசைப் பகுதிகளில் முன்னோடி சுகாதார திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் வலியுறுத்தினார்.

தென் மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் மாநாடு சென்னை சேத்துப்பட்டு காசநோய் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ் பேசியது:

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிர்வலை சிறுநீரகக் கல் உடைப்பு வசதிகள், இதயநாள நோய் கண்டறியும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு இலவச வசதிகள் அளிக்கப்படுகின்றன.

வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் நோயாளிகள் பிற சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதுபோன்று முழுமையான சுகாதார சேவைகள் அளித்தபோதிலும், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை பெருகி வருவது கவலைக்குரியது. புதுச்சேரியில் இந்த நோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்துவதற்கு அதிகச் செலவுகள் செய்யப்படுகின்றன.

இருப்பினும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவம் சார் பணியாளர்களை தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அமர்த்த மத்திய அரசு உதவ வேண்டும்.

புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து மத்திய அரசு அளித்து வரும் உதவிகள், வழிகாட்டு நெறிமுறைகள், ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக தொற்றுநோய் பரவும் அபாய காலங்களில் மத்திய அரசின் உதவிகள் கிடைத்து வருகின்றன.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்ககம் 2012-ம் ஆண்டுக்கென குறித்த குறியீடுகள் அனைத்தும் புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2010-2011-ம் ஆண்டில் தேசிய நகர சுகாதார இயக்கத்தின் செயல்பாட்டுக்குள் நகர குடிசைப் பகுதிகளில் முன்னோடி சுகாதாரத் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் அமைச்சர் வல்சராஜ்.

Last Updated on Friday, 13 November 2009 09:11