தினமணி 04.12.2009
5 ஆண்டுகளில் குடிசைகளற்ற இந்தியா: மத்திய அரசு தகவல்
புது தில்லி, டிச.3: அடுத்த 5 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு வீடுகட்டித் தரும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்தவுள்ளது.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் செüகத் ராய் பதிலளிக்கையில் கூறியதாவது:
நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் மக்கள்தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 1993-1994 முதல் 2004-2005ம் ஆண்டு கால இடைவெளியில் 7 கோடியே 63 லட்சமாக இருந்த மக்கள்தொகை 8 கோடியே 8 லட்சமாக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுவதே, நகர்ப்புறங்களில் மக்கள்தொகை அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றார் அமைச்சர் செüகத் ராய்.