தினகரன் 21.12.2009
உக்கடம் குடிசை மாற்று வாரியத்தில் 354 வீடுகள் விரைவில் ஒப்படைப்பு
கோவை: உக்கடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் 354 வீடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை உக்கடம் வின்சென்ட் ரோட்டில் கடந்த ஆண்டு ஏஏ பிரிவில் இருந்த 3 அடுக்குமாடி அடியோடு சரிந்தது. இதில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பழுதடைந்து காணப்பட்ட அனைத்து அடுக்குமாடி வீடுகளும் அதிரடியாக இடித்து தரைமாட்டமாக்கப்பட்டது. குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 13.75 கோடி ரூபாய் செலவில் மீண்டும் அதே இடத்தில் அடுக்குமாடி வீடு கட்டும் பணி துவங்கியது. தற்போது கட்டுமான பணிகள் 95 சதவீதத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான கட்டடங்களில் மேற்கூரை மற்றும் பூச்சு பணிகள் நடக்கிறது. வெளிப்பூச்சு பணி விரைவாக முடியும் நிலையில் இருக்கிறது. ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி முடிந்ததும், இப்பகுதியில் ஏற்கனவே குடியிருந்தவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும். புதிய கட்டடத்திற்கு பின்பகுதியில் வாலாங்குள வாய்க்கால் உள்ளது.
354 வீடுகளின் கழிவு நீரும் இந்த குளத்து வாய்க்காலில் தான் விடப்படும். நகரின் தெற்கு பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் இந்த கால்வாயில் திருப்பி விடப்பட்டுள்ளது. தனி சாக்கடை கால்வாய் அமைத்து, உக்கடம் கழிவு பண்ணை வளாகத்திற்கு கழிவு நீரை திருப்பி விட ஏற்பாடு செய்தால் பிரச்னை இருக்காது.