தினமலர் 30.12.2009
குடிசை மேம்பாட்டு திட்டத்தில் பணி மானிய தொகை திரும்ப வழங்க கெடு
நாமக்கல்: "குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானிய தொகை பெற்று பணிகளை துவக்காத பயனாளிகள், மானிய தொகையை திருப்பி செலுத்த வேண்டும்' என, நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் கூறினார்.
தேசிய ஒருங்கிணைப்பு நகர குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதியில் 440 வீடுகள் தேர்வு செய்யப் பட்டு, புதுப்பிக்கவும், விரிவுப்படுத்தவும் தலா 72 ஆயிரம் ரூபாய் வீதம் 3 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டது. அதில், 316 பேர் தங்களது வீடுகளை புதுப்பிக்கவும், விரிவுப்படுத்தும் பணியை துவங்கி உள்ளனர்.
மீதமுள்ள 124 பேர் எவ்வித பணியும் துவக்காமல் உள்ளனர். அவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பணி துவங்காததற்கான காரணம், அதில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மானிய தொகையை பயன்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு பயன்படுத்தவில்லை என்றால் தொகையை திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மானிய தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர். திருப்பி பெறப்படும் தொகையை வேறு பயனாளி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது