தினமணி 05.01.2010
540 குடிசை வாசிகளுக்கு வீடுகளை ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர், ஜன.4: பெங்களூரில் வீட்டுவசதி வாரியம் கட்டிய 540 வீடுகளை வீடு இல்லாத, நிலமற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்பேத்கர் நினைவு அறக்கட்டளை தலைவர் டி.சி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூர் லிங்கராஜபுரம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் 684 வீடுகளைக் கட்டியுள்ளது. கர்நாடக அரசின் ஆஷ்ரியா திட்டத்தின் கீழ் அந்த வீடுகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று குடிசைகளில் வசிக்கும் 415 பேர் அரசுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களின் விண்ணப்பத்தை குடிசை மாற்று வாரியம் பரிசீலிக்கவில்லை. ஆஷ்ரியா திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கப்பட இவர்கள் தகுதியானவர்களா என்று ஆய்வு செய்யவில்லை. இதை அடுத்து வீட்டுவசதி வாரிய வீடுகளை குடிசைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் பொதுநல வழக்கு ஒன்றை அம்பேத்கர் நினைவு அறக்கட்டளை தொடர்ந்தது.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், லிங்கராஜபுரத்தில் வீட்டுவசதி வாரியம் கட்டிய வீடுகளை 540 பேருக்கு ஆஷ்ரியா திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.