தினமலர் 19.01.2010
மேம்பாட்டு பணி: டவுன் பஞ்., இயக்குனர் ஆய்வு
மோகனூர்: மோகனூரில் செயல்பட்டு வரும் கலவை உரப்பூங்கா, ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை, டவுன் பஞ்சாயத்து இயக்குனர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மோகனூர் டவுன் பஞ்சாயத்தில் 2008ல் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண் திட்டம் துவக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி நகரில் உள்ள 15 வார்டுகளில் சேரும் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்பட்டது. மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி அதை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டம் 2008ல் செயல்படுத்தப்பட்டது.
அந்த திட்டத்தில் 161 வீடுகளுக்கு தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் 1.50 கோடி ரூபாய் மானியம், தார் சாலை அமைத்தல், சமுதாயக்கூடம் கட்டுதல் உள்பட 3.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முடிக்கப்படாத வீடுகள் கட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும், இரண்டு லேயர் சல்லி போடப்பட்டு சாலைப்பணியும் பாதி முடிந்துள்ளது.
இந்நிலையில், டவுன் பஞ்சாயத்துகளின் இயக்குனர் ராஜேந்திரன் மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இயற்கை உரப்பூங்காவை ஆய்வு செய்தார். "இயற்கை உரம் தயாரிக்கும் முறை, விற்பனை செய்யும் விதம், விவசாயிகளிடம் உள்ள வரவேற்பு, சந்தை படுத்துவது குறித்து' அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.
"வீடுகள் அனைத்தும் தரமானதாக உள்ளதாக, அரசு விதிப்படி முறையாக கட்டப்படுகிறதா என ஆய்வு செய்தார். கட்டப்படாத வீடுகளை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சேலம், நாமக்கல் மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் ஞானசேகரன், மாவட்ட உதவி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, செயல் அலுவலர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.