தினமலர் 27.01.2010
பெரம்பலூரில் 67 லட்சம் மதிப்பில் குடியிருப்பு மேம்பாடு: அமைச்சர்பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் நல குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தமிழரசி கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் மனிதநேய வார விழா நடந்தது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி துவக்கி வைத்து பேசியதாவது:
ஏழைகளின் எண்ணங்களை அறிந்து தமிழக முதல்வர், அருந்ததியருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்து வாழ்க்கை தரம் உயர்த்தியுள்ளார். 56 பேர் மருத்துவ படிப்பும், ஆயிரத்து 156 பேர் இன்ஜினியரிங் படிப்பும் பயின்று வருகின்றனர். நல்ல சூழ்நிலையில் ஆதிதிராவிட மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்று நபார்டு திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட விடுதி பராமரிப்புக்காக 35 லட்சம் ரூபாயும், ஐந்து விடுதி கட்ட இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயும், சமுதாயக்கூடம் கட்ட பத்து லட்சம் ரூபாயும் மேலும் சில பணிகளுக்காக நான்கு கோடியே 40 லட்சம் ரூபாயும் பெற்று பணிகள் நடந்து வருகிறது.
நபார்டு திட்டத்தின்கீழ் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 67 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் நல குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். விழாவுக்கு கலெக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் டி.ஆர்.ஓ., பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொடியரசிதுரைசாமி, ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, குரும்பலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ரமணிராணி, செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.