தினமலர் 22.02.2010
வீட்டு வசதி திட்டத்துக்கு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட வசதியாக குடிசை வீடுகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகள் எல்லாம் கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்திட முதல் கட்டமாக ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் ஒரு பஞ்சாயத்து வீதம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி வி.ஏ.ஓ., பஞ்சாயத்து எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள் கொண்ட குழு மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.இக்குழு பணிகளை கண்காணிக்க அந்தந்த ஒன்றியத்தின் துணை பி.டி.ஓ., ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் எட்டு பஞ்சாயத்து யூனியன்களான தர்மபுரிக்கு கடத்தூர், நல்லம்பள்ளி யூனியனில் சிவாடி, பென்னாகரம் யூனியனில் பள்ளிப்பட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அரூர் யூனியனில் கே.வேட்ரப்பட்டியும், மொரப்பூர் யூனியனில் ஈச்சம்பாடியும், பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் போதக்காடு, காரிமங்கலம் யூனியனில் அனுமந்தபுரமும், பாலக்கோடு யூனியனில் சூடனூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, குடிசை வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகுடறது.பென்னாகரம் யூனியன் பள்ளிப்பட்டி பஞ்சாயத்துபகுதியில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். "சரியான முறையில் கணக்கெடுப்பு பணிகளை செய்திட வேண்டும். குறைகள் ஏதாவது வந்தால் சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என குழுவினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பென்னாகரம் பி.டி.ஓ., ராஜேந்திரன், துணை பி.டி.ஓ., ஜெயகாந்தன் உட்பட பலர் ஆய்வின் போது கலந்து கொண்டனர்