தினமலர் 25.02.2010
வீட்டு வசதி வாரியத்தில் குலுக்கல் முறையில் தேர்வு
ஓசூர்: ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தில் எட்டு வீடுகளுக்கு 49 விண்ணப்பங்கள் குவிந்ததால், குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஓசூர் நகரின் முக்கிய பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. பாகலூர் சாலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பகுதி- 6ல் எட்டு உயர் வருவாய் பிரிவு தனி வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. இதில், எட்டு வீடுகளை பெறுவதற்கு 49 பேர் விண்ணப்பித்தனர்.
ஓசூர் வீட்டு வசதிவாரியம் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். பகுதி-6ல் உள்ள ஒரு உயர் வருவாய் பிரிவு வீட்டுக்கும் 36 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. விலை அதிகமாக இருந்தாலும், வீடுகளை பெறுவதில் பயனாளிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியதால் வீட்டுவசதிவாரியத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.
இதே போல், பாகலூர் ஹவுசிங் ஃபோர்டு பகுதி-7ல் உள்ள பிருந்தாவன் நகரில் நான்கு உயர் வருவாய் தனி வீடுகள், ஒன்பது மத்திய வருவாய் பிரிவு தனி வீடுகள், மூன்று குறைந்த வருவாய் பிரிவு தனி வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. உயர் வருவாய் பிரிவு வீடுகளுக்கு 24 லட்ச ரூபாயும், மத்திய வருவாய் பிரிவு வீடுகளுக்கு 15 லட்ச ரூபாயும், குறைந்த வருவாய் பிரிவு வீடுகளுக்கு 7 லட்ச ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நான்கு உயர் வருவாய் பிரிவு வீடுகளுக்கு இரண்டு பேரும், ஒன்பது மத்திய வருவாய் பிரிவு வீடுகளுக்கு ஏழு பேரும், மூன்று குறைந்த வருவாய் பிரிவு வீடுகளுக்கு நான்கு பேர் மட்டும் விண்ணப்பித்தனர். இதனால், குலுக்கல் முறையை தவிர்த்து, வீடுகள் வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் செயற்பொறியாளர் மனோகரன் கூறியதாவது: ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தை பொறுத்தவரையில் கட்டப்படும் வீடுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு வருகிறது. நகரின் எந்த இடத்தில் வீடுகள் போட்டாலும் பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தனியாரை விட நல்ல காற்றோட்டமான இடம், பூங்கா, வணிக வளாகம் மற்றும் நல்ல குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதால், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. தற்போது பகுதி-7 பிருந்தாவன் நகர் மற்றும் பகுதி-6 பாகலூர் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட இடங்களில் தனி குடியிருப்பு வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார