தினமலர் 27.03.2010
குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.5 கோடியில் 580 வீடுகள்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்ட பயனாளிகளுக்கான ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்து பேசுகையில்,தஞ்சை மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதில் பெரம்பலூர் நகராட்சி முன்னிலை வகிக்கிறது.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் 6.5 கோடி மதிப்பில் 580 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வீடு கட்டுவதற்கான வரைப்பட அனுமதி ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும் அவர்களுக்கு மிக குறைந்த 4 சதவீத வட்டியில் ரூ. 20ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றார். பின்னர், குறிப்பட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டிமுடித்த பயனாளிகளுக்கு சிறப்பு பரிசுகளை நகராட்சி தலைவர் ராஜா வழங்கினார்.முகாமில் தஞ்சை மண்டல திட்ட அலுவலர் சுவாமிநாதன், உதவி பொறியாளர் கவிதா, நகராட்சி துணைத் தலைவர் முகுந்தன், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி ஆணையர் அசோக்குமார் வரவேற்றார். முடிவில் நகராட்சி பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.