Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி, ஊராட்சிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு: திரிசங்கு நிலையில் எட்டு ஊராட்சிகள்

Print PDF

தினமலர் 01.04.2010

மாநகராட்சி, ஊராட்சிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு: திரிசங்கு நிலையில் எட்டு ஊராட்சிகள்

திருப்பூர் : தமிழக அரசின் இலவச கான்கிரீட் வீடு திட்டத்திற்காக, ஊராட்சி பகுதிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. குடிசைமாற்று திட்டத்தில், மாநகராட்சி பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள எட்டு ஊராட்சிகளில் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது, அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இலவச கான்கிரீட் வீடு திட்டத்தின் மூலம், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிசைகள், கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. கணக்கெடுப்பு நடத்தி, குடிசைவாசிகளுக்கு, அதே இடத்தில் கான்கிரீட் வீடு இலவசமாக கட்டிக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், கடந்த 29ம்தேதி முதல் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. கிராமநிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் அடங்கிய குழு, ஊராட்சி முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

'கணக்கெடுப்பு முடிந்து, பயனாளிகள் பட்டியல் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 15ம் தேதிக்குள் கணக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற உத்தரவின்பேரில், பணிகள் தீவிரமடைந்துள்ளன. நகரப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகள் குறித்த முழுவிவரங்களைச் சேகரித்து, அப்பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'குடிசைப்பகுதி விவரங்கள் வறுமை மற்றும் வாழ்வாதார நிலை கணக்கெடுப்பு' நடத்தப்படுகிறது.

கடந்த மார்ச் 22ம் தேதி முதல், அந்தந்த பகுதி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக, கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. குடிசைப்பகுதி கணக்கெடுப்பின் அடிப்படையில், குடிசைகள் இல்லா மாநகராட்சி திட்டத்தில், குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக தரம் உயர்த்தப்படும்.திருப்பூர் ஒன்றியத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த பயனாளிகள் தேர்வு பயிற்சிக்கு பிறகு, கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 21 ஊராட்சிகளில், செட்டிபாளையம், தொட்டி பாளையம், நெருப்பெரிச்சல், தொட்டியமண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மீதியுள்ள வள்ளிபுரம், சொக்கனூர், பட்டம்பாளையம், மேற்குபதி, தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், முதலிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய 13 ஊராட்சிகளில் மட்டும் குடிசை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாநகராட்சியுடன் இணையும் எட்டு ஊராட்சிகள் அத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

மாநகராட்சி சார்பில் குடிசைமாற்று திட்டத்திற்கான கணக்கெடுப்பும், 52 வார்டுகளில் மட்டும் நடக்கிறது. மாநகராட்சியுடன் இணைய உள்ள எட்டு ஊராட்சிகள் குறித்து யோசிக்கப்படவில்லை. பயனாளிகளை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை முடிக்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடியும். இதனால், எட்டு ஊராட்சிகளில் பணிகளை செய்தாலும், கணக்கு முடிக்கும்போது பிரச்னை ஏற்படும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் எட்டு ஊராட்சிகளையும் இத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளது.

தமிழக அரசு கடந்த வாரத்தில், மாநகராட்சி விஸ்தரிக்கப்படும் போது, இணைக்கப்பட உள்ள எட்டு ஊராட்சிகள் விவரத்தை அரசாணையில் வெளியிட்டிருந்தது.எப்படியும் வரும் உள்ளாட்சி தேர்தலின்போது, எட்டு ஊராட்சிகளும் மாநகராட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்கும். இதனால், மாநகராட்சி பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நடத்தப்படும் குடிசை கணக்கெடுப்பை, எட்டு ஊராட்சிகளிலும் நடத்தி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சியுடன் இணையும் எட்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது: இலவச கான்கிரீட் வீடு திட்டம் குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அதிகப்படியான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் இல்லை. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகங்களுடன் வாதாடுகின்றனர். மாநகராட்சியுடன் இணைவது உறுதியாகியும், இதுவரை எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வில்லை. எனவே, மாநகராட்சியில் நடக்கும் கணக்கெடுப்பை இந்த ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, திரிசங்கு நிலையில் உள்ள எட்டு ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும், என்றனர்.

மாநகராட்சியிலும், 13 ஊராட்சிகளிலும் போட்டிபோட்டுக்கொண்டு குடிசைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக, வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைய உள்ள எட்டு ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Last Updated on Thursday, 01 April 2010 07:07