Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் மீண்டும் புதைந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு!

Print PDF

தினமணி 19.04.2010

கோவையில் மீண்டும் புதைந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு!

கோவை, ஏப்.18: கோவையில் குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு மீண்டும் பூமிக்குள் ஞாயிற்றுக்கிழமை புதைந்தது.

ஒரே மாதத்தில் 2}வது முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் புதைந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில்கோவை ராமநாதபுரம் அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இப் பணி கடந்த 2009}ம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது.

ஒரு பிளாக்கில் 48 வீடுகள் என மொத்தம் 16 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் ரூ.18 கோடி செலவில் 936 வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் 270 சதுர அடி பரப்பளவு கொண்டது.

கிட்டத்தட்ட 80 சதவீத கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், ஏப்.4}ம் தேதி 48 வீடுகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பூமிக்குள் 56 செ.மீ. வரை புதைந்தது.

இதனால், ஒருபுறமாக அந்தக் கட்டடம் சாய்ந்தது. தொடர்ந்து புதைந்ததால், அந்த 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடியை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3}வது மாடியின் கீழ் தளம் இடிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில், சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், அம்மன் குளத்தில் ஏற்கெனவே பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக்கு நேர் எதிரே உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டடத்தின் 24 குடியிருப்புகளை கொண்ட ஒரு பிளாக் 25 செ.மீ. பூமிக்குள் புதைந்தது.

இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் நடுவே அரை அடி அகலத்துக்கு விரிசல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல இந்த விரிசல் பெரிதாகிக் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை சுற்றிலும் பெரிய இரும்பு ராடுகளைக் கொண்டு கட்டடத் தொழிலாளர்கள் முட்டுக் கொடுத்தனர். இதனால், கட்டடம் மேலும் சரியாமல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த குடிசைமாற்று வாரிய உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கட்டடங்களின் நிலை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

கட்டடத்தில் மேலும் விரிசல் ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குடிசை மாற்றுவாரிய நிர்வாகப் பொறியாளர் கோபி கூறியது:

முறையான மண் பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் அம்மன் குளத்தில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், ஒரு அடுக்குமாடி கட்டடம் பூமிக்குள் புதைந்தது. அதை இடிக்கும் பணி மேற்கொண்ட போதே மற்றொரு கட்டடமும் பூமிக்குள் புதையத் துவங்கியுள்ளது.

பூமிக்குள் புதைந்த கட்டடம் விழாமல் தடுப்பதற்காகத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரிந்த கட்டடத்தின் அருகே எடுக்கப்பட்ட மண் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். "இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் குளம் இருந்தது. கட்டடங்களுக்கான அஸ்திவாரம் தோண்டும்போது கூட அதிக நீர் ஊற்றெடுத்தது. குளங்கள் இருந்த பகுதியில் வீடுகள் கட்டலாம். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குளங்கள் ஏற்றதல்ல. சிறிதளவு மழை பெய்தாலும் கூட ஒவ்வொரு அடுக்குமாடியாக பூமிக்குள் புதைகிறது. மழைக் காலம் வரையாவது இந்தக் கட்டடங்கள் நிலைத்து நிற்குமா? என்பது சந்தேகம் தான்.அதனால், உயிருக்கும், உடமைக்கு பாதுகாப்பு இல்லாத இந்தக் கட்டடங்களில் நாங்கள் குடியேற மாட்டோம்' என்கின்றனர் அப் பகுதி மக்கள்.

"சரிந்த கட்டடத்தின் அடித்தளம் பலப்படுத்தப்படும்'

பூமிக்குள் புதைந்து சரிந்த கட்டடத்தின் அடித்தளம் பலப்படுத்தப்படும் என தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடிசைமாற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பூமிக்குள் புதைந்தது. அதைத் தொடர்ந்து, ஆழ்துளையிட்டு மண்ணின் தன்மை குறித்து ஆராயப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள எண்ணியுள்ள நிலையில், 24 வீடுகளை கொண்ட ஒரு பிளாக் பூமிக்குள் 25 செ.மீ. புதைந்தது. பரிசோதனையில், இந்தக் கட்டடத்தின் கீழ் இலகுவகை மண் இருப்பது தெரியவந்தது. சனிக்கிழமை இரவு பெய்த மழைதான் இதற்குக் காரணம். கட்டடம் மேலும் புதையாமல் தடுக்கவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் சரிந்த கட்டடத்தின் அடித்தளத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 10:05