தினமலர் 21.04.2010
அம்மன்குளம் விவகாரம்; தகவல் உரிமை சட்டத்தில் தகவல் திரட்ட முடிவு -நமது சிறப்பு நிருபர்
கோவை அம்மன் குளம் பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் கட்ட அனுமதித்த விவகாரத்தில், உண்மை விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெற எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், கோவை அம்மன் குளம் பகுதியில் 936 வீடுகள் கட்டப்பட்டு வந்தன. இவற்றில், ஒவ்வொரு அடுக்கு மாடியாக பூமிக்குள் புதைந்து வருவதால், பொது மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. முதலில் புதைந்த கட்டடம், இடிக்கப்பட்டு வருகிறது. அதை இடித்து முடிப்பதற்குள் மற்றொரு கட்டடமும், கீழே பூமியில் இறங்கி விட்டது. இதனால், கட்டடத்தின் நடுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இடிக்காமலே, அஸ்திவாரத்தை பலப்படுத்தப்போவதாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒட்டு மொத்தமாக அனைத்து கட்டடங்களை இடித்து விட்டு, வேறு இடத்தில் கட்டடம் கட்டினால் 29 கோடி ரூபாய் இழப்பை எப்படி சரிக்கட்டுவது. அதற்காக, அரசு தரும் உத்தரவாதத்தை நம்பி தங்கள் உயிரைப் பணயம் வைக்க பொது மக்களும் தயாராக இல்லை. அம்மன் குளத்தில், அடுக்கு மாடி கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. பிரச்னையும், பரபரப்பும் ஓய்ந்த பின், மீண்டும் இங்கு பணிகளைத் துவக்கலாமா என்ற ஆலோசனையில் அரசு உள்ளது. ஆனால், தென் மேற்கு பருவமழை துவங்கி விட்டால், நிலைமை இன்னும் சிக்கலாவது உறுதி.
அம்மன் குளத்தில் மண் பரிசோதனை செய்த அறிக்கை, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது, நிர்வாக ஒப்புதல் வழங்கிய காரணம், தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வாங்கவும் அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., முடிவு செய்துள்ளன.
ஒரு வேளை, 'பல அடுக்கு மாடி கட்டுவதற்குத் தகுந்த இடம்' என்று அறிக்கை தந்து இருப்பதாக பதில் கிடைத்தால், அறிக்கை தந்த தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு சிக்கல் ஏற்படும். அதற்கு நேரெதிர் அறிக்கை தந்திருந்தால், அந்த இடத்தில் கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில், மண் பரிசோதனை செய்தது யார், அதன் விபரம் என்ன என்ற தகவலை குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் யாருமே தரத் தயாராக இல்லை. எப்போது கேட்டாலும், ஏதாவது பதில் கூறி தட்டிக் கழித்தே வருகின்றனர். அதுவே, எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், அனைத்துத் தகவல்களையும் தர வேண்டிய கட்டாயம், மாநகராட்சிக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் உள்ளது. அதிலிருந்து அந்த துறை அலுவலர்கள் தப்பவே முடியாது.
யார் பொறுப்பு?: புதைந்த கட்டடங்களைத் தவிர, மற்ற கட்டடங்களுக்கு ஆபத்து இல்லை என்பது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வாதம். அவர்களின் கூற்றுப்படி, இதுவரை புதையாத கட்டடங்களில் மக்கள் குடியேறலாம். ஒரு வேளை, இந்த கட்டடங்களில் குடியேறிய பின், மழைக்காலத்தில் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா என்பதே ஏழைகளின் கேள்வி. மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணானதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், அரசின் முடிவு என்ன என்பதையும் தெளிவு படுத்தி, மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும், குழப்பத்தையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.