Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

அம்மன்குளத்தில் மேலும் 4 கட்டடங்களுக்கு ஆபத்து : புதைவதற்கு காரணம் இளகிய மண் தான் நிபுணர் குழு இறுதி அறிக்கையில் தகவல்

Print PDF

தினமலர் 24.04.2010

அம்மன்குளத்தில் மேலும் 4 கட்டடங்களுக்கு ஆபத்து : புதைவதற்கு காரணம் இளகிய மண் தான் நிபுணர் குழு இறுதி அறிக்கையில் தகவல்

அம்மன்குளம் அம்மன்குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடங்கள் புதைவதற்கு, அஸ்திவாரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் இளகிய மண் தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள் ளது. ஏற்கனவே புதைந்த இரு கட்டடங்களை தவிர, மேலும் மூன்று முதல் நான்கு கட்டடங்களின் அடியில் இளகிய மண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கோவை அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடிகளில், இரு கட்டடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. முதலில் புதைந்த கட்டடம் இடிக்கப் பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக ஒரு கட்டடமும் மண்ணில் புதைய துவங்கியது. கட்டடம் மண்ணில் புதைவதற்கான காரணம் பற்றி அறிய கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி

பேராசிரியர் அருமை ராஜ், சென்னை பல்கலை பேராசிரியர் சாந்தகுமார், கோவை பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர் பழனிக்குமார் அடங்கிய நிபுணர் குழு ஏற்படுத்தப் பட்டது. இக்குழுவினர் ஆய்வில், அஸ்திவாரத்தின் கீழ் உள்ள மண், இளகிய தன்மை கொண்டதாக இருந்ததே காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் காந்தி, சென்னை பல்கலை பேராசிரியர் சாந்தகுமார் ஆகியோர் நேற்று அம்மன்குளம் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இடிக்கப்படும் கட்டடத்தின் பின்புறம் 12 அடி ஆழ குழியில் இறங்கி, கடப்பாறையால் மண்ணை குத்தி சோதித்தனர். ஏற்கனவே கட்டடத்தின் கீழிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளையும் ஆய்வு செய்தனர். இறுகிய உருளைகளாக மாறியிருந்த மண் மாதிரிகளை தண்ணீரில் மூழ்க வைத்து, அதன் உறுதி தன்மையை பரிசோதித்தனர். அஸ்திவாரம் தோண்டுவது முதல் தற்போது நடக்கும் கட்டுமானப் பணிகள் வரை, அனைத்து பணிகளின் புகைப்படங்களையும் வரவழைத்து பார்த்தனர். அஸ்திவாரத்தின் ஆழம், பயன்படுத்தப்பட்ட கலவை விகிதம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கேட்டறிந்தனர்.

குழுவினர் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அம்மன் குளம் பகுதியில் மொத் தம் 25 போர்வெல்கள் போட்டு, மண் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது புதைந்து வரும் இரு கட்டடங்களை தவிர, மேலும் மூன்று முதல் நான்கு கட்டடங்களின் அடியில் உள்ள மண் அடுக்குகளும் இள கிய தன்மையுடன் இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அஸ்திவாரத்தின் அடியில் இளகிய மண் இருப்பதே கட்டடங்கள் புதைய காரணம். இரண்டாவதாக புதைந்து வரும் கட்டடத்தில் விரிசல் எதுவும் இல்லை.

இந்த கட்டடத்துடன், புதைய வாய்ப்புள்ள மேலும் மூன்று முதல் 4 கட்டடங்களை, 'ஜெட் கிரவுட்டிங்' டெக்னிக் பயன்படுத்தி பலப்படுத்தலாம். இந்த முறையின்படி, இக்கட்டடங்களின் ஒவ்வொரு 'காலம்' வழியாக, அஸ்திவாரத்தின் ஆழம் வரை துளையிட்டு, கெமிக்கல், சிமென்ட் கலவை மேலிருந்து உயர்ந்த அழுத்தத்தில் பீய்ச்சியடிக்கப்படும். கட்டடத்தின் அடியில் உள்ள இளகிய மண், இதன் மூலம் உறுதிப் படுத்தப்படும். மண்ணின் இடையே சிறு இடைவெளி இருந்தாலும், இந்த கலவை அதை இணைத்து மூடி விடும். அதன் பின் கட்டடங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது. இதைத்தவிர பிற குடியிருப்புகள் நல்ல நிலையில்தான் உள்ளதால், அங்கு 'கிரவுட்டிங்' தொழில்நுட்பம் தேவைப்படாது.

Last Updated on Saturday, 24 April 2010 05:53
 

பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள்: விசாரணைக் கமிஷன் அமைக்க சிபிஐ கோரிக்கை

Print PDF

தினமணி 21.04.2010

பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள்: விசாரணைக் கமிஷன் அமைக்க சிபிஐ கோரிக்கை

கோவை, ஏப்.18: கோவையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பூமிக்குள் புதைந்தது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை ராமநாதபுரம் அம்மன் குளத்தில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 16 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் 48 வீடுகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடி ஏப்.4}ம் தேதி பூமிக்குள் புதைந்தது. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, சரியான இடத்தில் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் மற்றொரு கட்டடம் செங்குத்தாகப் பிளந்து, ஒருபுறம் சாய்ந்துள்ளது.

இதனால், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற இருப்போர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அஸ்திவாரத்துக்கு மண் எடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் ஈரமாக இருப்பதாகவும், தண்ணீர்க் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இச் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்கள் கட்ட அம்மன் குளம் தகுதியான இடம் இல்லை என்பதால் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.

சம்பவ இடத்தை எம்.ஆறுமுகம், மாநகராட்சி கல்வி குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 11:03
 

அம்மன்குளம் விவகாரம்; தகவல் உரிமை சட்டத்தில் தகவல் திரட்ட முடிவு -நமது சிறப்பு நிருபர்

Print PDF

தினமலர் 21.04.2010

அம்மன்குளம் விவகாரம்; தகவல் உரிமை சட்டத்தில் தகவல் திரட்ட முடிவு -நமது சிறப்பு நிருபர்

கோவை அம்மன் குளம் பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் கட்ட அனுமதித்த விவகாரத்தில், உண்மை விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாகப் பெற எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், கோவை அம்மன் குளம் பகுதியில் 936 வீடுகள் கட்டப்பட்டு வந்தன. இவற்றில், ஒவ்வொரு அடுக்கு மாடியாக பூமிக்குள் புதைந்து வருவதால், பொது மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. முதலில் புதைந்த கட்டடம், இடிக்கப்பட்டு வருகிறது. அதை இடித்து முடிப்பதற்குள் மற்றொரு கட்டடமும், கீழே பூமியில் இறங்கி விட்டது. இதனால், கட்டடத்தின் நடுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இடிக்காமலே, அஸ்திவாரத்தை பலப்படுத்தப்போவதாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஒட்டு மொத்தமாக அனைத்து கட்டடங்களை இடித்து விட்டு, வேறு இடத்தில் கட்டடம் கட்டினால் 29 கோடி ரூபாய் இழப்பை எப்படி சரிக்கட்டுவது. அதற்காக, அரசு தரும் உத்தரவாதத்தை நம்பி தங்கள் உயிரைப் பணயம் வைக்க பொது மக்களும் தயாராக இல்லை. அம்மன் குளத்தில், அடுக்கு மாடி கட்டும் பணிகளை குடிசை மாற்று வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. பிரச்னையும், பரபரப்பும் ஓய்ந்த பின், மீண்டும் இங்கு பணிகளைத் துவக்கலாமா என்ற ஆலோசனையில் அரசு உள்ளது. ஆனால், தென் மேற்கு பருவமழை துவங்கி விட்டால், நிலைமை இன்னும் சிக்கலாவது உறுதி.

அம்மன் குளத்தில் மண் பரிசோதனை செய்த அறிக்கை, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தது, நிர்வாக ஒப்புதல் வழங்கிய காரணம், தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வாங்கவும் அ.தி.மு.., மற்றும் ம.தி.மு.., முடிவு செய்துள்ளன.

ஒரு வேளை, 'பல அடுக்கு மாடி கட்டுவதற்குத் தகுந்த இடம்' என்று அறிக்கை தந்து இருப்பதாக பதில் கிடைத்தால், அறிக்கை தந்த தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு சிக்கல் ஏற்படும். அதற்கு நேரெதிர் அறிக்கை தந்திருந்தால், அந்த இடத்தில் கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், மண் பரிசோதனை செய்தது யார், அதன் விபரம் என்ன என்ற தகவலை குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் யாருமே தரத் தயாராக இல்லை. எப்போது கேட்டாலும், ஏதாவது பதில் கூறி தட்டிக் கழித்தே வருகின்றனர். அதுவே, எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், அனைத்துத் தகவல்களையும் தர வேண்டிய கட்டாயம், மாநகராட்சிக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் உள்ளது. அதிலிருந்து அந்த துறை அலுவலர்கள் தப்பவே முடியாது.

யார் பொறுப்பு?: புதைந்த கட்டடங்களைத் தவிர, மற்ற கட்டடங்களுக்கு ஆபத்து இல்லை என்பது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வாதம். அவர்களின் கூற்றுப்படி, இதுவரை புதையாத கட்டடங்களில் மக்கள் குடியேறலாம். ஒரு வேளை, இந்த கட்டடங்களில் குடியேறிய பின், மழைக்காலத்தில் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா என்பதே ஏழைகளின் கேள்வி. மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணானதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், அரசின் முடிவு என்ன என்பதையும் தெளிவு படுத்தி, மக்களுக்கு இருக்கும் அச்சத்தையும், குழப்பத்தையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

Last Updated on Wednesday, 21 April 2010 06:09
 


Page 38 of 69