Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

கோவை அம்மன்குளம் குடியிருப்பில் இரண்டாவது கட்டடம் பிளந்தது

Print PDF

தினமலர் 19.04.2010

கோவை அம்மன்குளம் குடியிருப்பில் இரண்டாவது கட்டடம் பிளந்தது

கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் ஏற்கனவே குடியிருப்பு கட்டடம் மண்ணில் புதைந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது இதன் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடத்தின் நடுவே நேற்று திடீர் பிளவு ஏற்பட்டது. இதனால், இங்கு கட்டப்பட்டுள்ள பிற அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களின் தரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை அம்மன் குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில், 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்டத்தில் கட்டப்படும் இந்த கட்டடங்களின் மொத்த மதிப்பு 29.43 கோடி ரூபாய்.கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் பூர்த்தியான நிலையில், இதில் 48 வீடுகள் கொண்ட ஒரு கட்டடம் மண்ணில் புதையத் துவங்கியது. 58 செ.மீ., புதைந்து விட்ட நிலையில் மேலும் புதையாமல் தடுக்கப்பட்டது. அஸ்திவாரம் போடப்பட்ட பகுதி வரை 'கான்கர்' எனும் இறுகிய மண் இருந்ததால், 'கட்டுமானத்துக்கு ஏற்ற மண்' என, பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர் பழனிக்குமார் அறிக்கை அளித்தார்.இதனால் கட்டடம் புதைவதற்கான காரணத்தை கண்டறிய, அஸ்திவாரத்தில் இருந்து மேலும் 12 மீட்டர் ஆழம் தோண்டி மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இளகிய மண் (லூஸ் பாக்கெட்) கலந்து இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த இளகிய மண்தான் கட்டடம் புதைய காரணம் என உறுதியானது. இதனால் கட்டடத்தை முழுமையாக இடித்து, வேறு இடத்தில் கட்ட முடிவானது. தற்போது கட்டடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. நேற்று காலை பணிக்கு வந்த கட்டட தொழிலாளர்கள், இடிக்கப்படும் கட்டடத்தின் எதிரே உள்ள மற்றொரு கட்டடத்தின் நடுவே பிளவு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அங்கு வந்த குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் முந்தைய கட்டடம் போல், இந்த கட்டடமும் ஒரு புறம் புதைவதுதான், நடுவே ஏற்பட்ட பிளவுக்கு காரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த அம்மன் குளம் பகுதி மக்கள் ஆவேசத்துடன் குவிந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.இப்பகுதி மக்கள் கூறியதாவது:இந்த இடம் 35 ஆண்டுகளாக குளமாக தான் இருந்தது.

குளம் என நன்கு தெரிந்தும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட இந்த இடத்தை தேர்வு செய்தது முதல் தவறு. இதன் விளைவாக தற்போது கட்டடங்கள் ஒவ்வொன்றாக மண்ணுக்குள் புதைந்தும், பிளவுபட்டும் வருகின்றன. நாளை அனைவரும் குடியேறியபின் மொத்தமாக இடிந்து விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சிறு மழைக்கே இரண்டாக பிளந்த கட்டடம், அடைமழையின் போது நிச்சயம் இடிந்து விழும். இந்த வீடுகளில் இனி யாரும் குடியிருக்க தயார் இல்லை, என்றனர்.குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் கோபி கூறியதாவது:இரண்டு கட்டடங்களை இணைக்கும் இடத்தில் 'கான்கிரீட் காலம்' பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு கான்கிரீட் காலங்கள். சேர்த்து கட்டடப்படும் இரு கட்டடங்களின் உயரம் அதிகமாக இருந்தால், மாறும் காலநிலைக்கு ஏற்ப விரிவடைவது வழக்கம். இவ்வாறு விரிவடைவதை தடுக்க, இரண்டு கட்டடங்களையும் இணைக்கும் இடத்தில் 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாடி கட்டடம் என்றால் இது போல் 'இணைப்பு' கொடுப்பது வழக்கம். கட்டடத்தின் வட மூலை சிறிது மண்ணில் புதைந்துள்ளதால் அந்த ஜாயின்ட்தான் சிறிது விலகியுள்ளது.கட்டடம் மண்ணில் புதைய, ஏற்கனவே புதைந்த கட்டடத்தின் அடியில் இருப்பதுபோல் இங்கும் இளகிய மண் (லூஸ் பாக்கெட்) இருப்பதுதான் காரணம். அனைத்து கட்டடங்களின் அஸ்திவாரத்தையும் உறுதிப்படுத்தப் போகிறோம். நிபுணர் குழு ஆய்வுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.குடிசை மாற்று வாரியம் கூறுவது என்ன?கட்டடம் பிளவுப்பட்டதை கண்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், உடனே இது குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்து கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.

கலெக்டரின் அறிவுரையின்படி உடனடியாக அனைத்து பத்திரிகைகளுக்கும் விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில்,கடந்த 3ம் தேதி 48 குடியிருப்புகள் கொண்ட 2(பி) பிளாக்கில் சரிவு ஏற்பட்டு கீழே இறங்கியது. இதைத் தொடர்ந்து, அனைத்து பிளாக்குகளையும் ஆழ்துளையிட்டு மண்ணின் தன்மையை ஆராயும் பணி நடந்து வருகிறது.ஆய்வு முடிவுகளின்படி, நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடக்கு மூலையில் ஆழ் துளையிடும் பணி நடந்தபோது, இதன் அடித்தளத்துக்கு கீழே இலகுவகை மண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவு 10.00 மணியளவில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது.அப்போது 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடக்கு பகுதி, மண்ணில் இறங்கியது தெரிய வந்தது. நேற்று காலையில் 24 குடியிருப்புகள் கொண்ட 4(பி) பிளாக்கின் வடபுறம் 25 செ.மீ., இறங்கியுள்ளது தெரிய வந்தது. கட்டடம் மீண்டும் மண்ணுக்குள் இறங்காமல் இருக்க, நவீன தொழில்நுட்ப உதவியுடன் சரிந்த கட்டடத்தின் அடித்தளத்தை பலப்படுத்தி உறுதிநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 19 April 2010 06:43
 

வாரிசுகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்?

Print PDF

தினமலர் 13.04.2010

வாரிசுகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்?

சென்னை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீட்டாளர் மறைவுக்குப் பின், அவரது வாரிசுகளுக்கு பெயர் மாற்றித் தர வேண்டுமென, சென்னை சி..டி., நகர் மாதிரி வீடுகள் குடியிருப் போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடி யிருப்போர் நலச் சங்கத்தின் பேரவைக் கூட்டம், சென்னையில் நடந்தது. சங்கத் தலைவர் பெல்லியப்பா, துணைத் தலைவர் ஈஸ்வரன், செயலர் சுந்தரராஜன், பொருளாளர் சாய்குமாரி மோகன் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளின் கட்டணத்தை 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சி..டி., நகர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் தங்களுக்கு வீடுகளை சொந்தமாக்கித் தர வேண்டும், ஒதுக்கீட்டாளர் மறைவுக்குப் பின், சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு வீடுகளை தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 13 April 2010 06:56
 

குடிசையில்லா மாநிலமாக மாற்ற ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 12.04.2010

குடிசையில்லா மாநிலமாக மாற்ற ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு

பரமக்குடி, ஏப்.11: தமிழகத்தை குடியில்லா மாநிலமாக மாற்றுவதற்க ரூ. 1,800 கோடி நித ஒதுக்கப்பட்டு, அதற்கான கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுவருவதாக, குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், பாண்டியூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். கூட்டத்துக்கு கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒன்றியத் தலைவர் க.சமயமுத்து தலைமை வகித்தார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுப..சம்பத், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் அ.வே.அரவரசன், ஒன்றிய துணைச் செயலாளர் சன்.ராமபாண்டியன், கிளைச் செயலாளர் ஆர்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நயினார்கோவில் ஒன்றியச் செயலாளர் சுப..திவாகரன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் மேலும் பேசியது: திமுக அரசு தேர்தலில் சொல்லிய வாக்குறுதிகளையும் சொல்லாத பல நல்ல திட்டங்களையும் மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றிவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சித்தார்கோட்டையில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் காட்டாறு வெல்லம் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்கும் வகையில் 18 கோடியில் கஞ்சம்பட்டரை பகுதியில் அணை கட்டுவதற்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் பல நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏர்வாடி, நயினார்கோவில், ஆரம்பக்கோட்டை ஆகிய ஊர்களில் 30 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவ வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு செயல்பட்டுவருகின்றன. ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் தலா ரூ. 2 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் புதிய சாலைகள் போடப்பட்டும், புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு, 541 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்குள் தூர்வாரப்படாத அனைத்து கண்மாய்களும் இந்த ஆண்டுக்குள் தூர்வார திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசே அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது இந்த அரசுக்கு மின்பற்றாக்குறை பெறும் சவாலாக உள்ளது. அதைப் போக்கும் வகையில் தூத்துக்குடி, கல்பாக்கம் ஆகிய இடங்களில் நிலக்கரி மூலமாக அனல் மின்சாரம் கூடுதலாக கிடைக்கத் திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர். கூட்டத்தில், நயினார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 175 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Last Updated on Monday, 12 April 2010 09:39
 


Page 40 of 69