தினமலர் 19.03.2010
வீட்டு வசதி வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு
ஈரோடு: தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடு வாங்கியவர்கள், நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் விஜயகுமார் அறிக்கை:தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஈரோடு வீட்டுவசதி பிரிவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, தவணை முறை திட்டத்தில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தவணை முறை திட்டத்தில் பெரியார் நகர், பள்ளிபாளையம், சம்பத்நகர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாராபுரம், நசியனூர் சாலை, முத்தம்பாளையம் மற்றும் கோபி ஆகிய இடங்களில் வீடு பெற்றுள்ளவர்களில், மூன்று மாதத்துக்கு மேல் பணம் கட்டாதவர்கள் உள்ளனர். அவர்களின் ஒதுக்கீடு மறு அறிவிப்பின்றி ரத்து செய்யப்படும். ஒதுக்கீடுதாரர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். வாரியத்தால் இறுதி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள திட்டங்களுக்கு, தொகை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு உடனடியாக கிரயப்பத்திரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.