தினமலர் 25.01.2010
நகராட்சி பகுதியில் வீடு கட்ட கடன் உதவி
தர்மபுரி: சொந்தவீடு கட்ட வட்டி ஊக்க உதவியுடன் நகரம், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஆக்கபூர்வ திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வட்டி ஊக்குதவியுடன் கூடிய வீட்டுவசதி கடன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் நகரம், டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனக்கென்று சொந்தவீடு கட்டுவதற்கு தேவையான வட்டி ஊக்குதவியுடன் கூடிய வீட்டு வசதிக்கடன் தேசியமயமாக்கப்பட் வங்கிகளின் மூலம் கொடுக்கும் திட்டம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் மாத வருமானம் 5000 ரூபாய்க்கு குறையாமலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் 5,001 முதல் 10,000 ரூபாய் வரையில் இருக்க வேண்டும். அந்தந்த பிரிவினருக்குகேற்ப பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 25 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு கட்ட ஒரு லட்ச ரூபாயும் குறைந்த வருவாய் பிரிவினர் 40 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு கட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரையில் கடன் பெற்று பயன்பெறலாம். கடனை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 15 முதல் 20 ஆண்டுகள் வரை செலுத்தலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நகர் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கடன் பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டரிடம் இத்திட்டத்தில் பட்டா நகல், ரேஷன் கார்டு நகல், வருமான சான்றிதழ் ஆகியவற்றின் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.