தினமணி 11.11.2009
ஒசூர் வீட்டுவசதி வாரியத்தின் ரூ.36 லட்சம் வீடுகளை வாங்க போட்டி
ஒசூர், நவ. 9: ஒசூர் பாகலூர் அட்கோ பகுதியில் வீட்டுவசதி வாரியத்தில் கட்டப்படவுள்ள 8 வீடுகளுக்கு 46 பேர் தலா ரூ.1.80 லட்சம் செலுத்தி, விண்ணப்பித்து உள்ளனர்.
ஒசூரில் (பகுதி 6) பாகலூர் அட்கோ, (பகுதி 7) பிருந்தாவன் நகர் அருகில், (பகுதி 16) கோகுல்நகர் சாலை, (பகுதி 14) நல்லூர் சாலை ஆகிய இடங்களில் நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் உயர் வருவாய் பிரிவு வீடுகளை சுயநிதி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி வருகிறது. மேலும், ஒசூரில் மட்டும் ரூ.120 கோடியில் சுமார் 1000 வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் பாகலூர் அட்கோ பகுதியில் 8 வீடுகளுக்கும், பிருந்தாவன் பகுதியில் 42 வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பத்தின் விலை ரூ.500. விண்ணப்பிக்க கடைசி நாள் திங்கள்கிழமையாகும்.
பாகலூர் அட்கோ பகுதியில் ரூ.36 லட்சம் (சேவை வரி தனி) மதிப்பிலான வீடு, 7.5 சென்ட் நிலத்தில் 745 சதுர அடியில் கட்டப்படும் இரு படுக்கை அறைகள் கொண்டதாகும். தற்போது 8 வீடுகளுக்கு 46 பேர் ரூ.1.80 லட்சம் வரைவோலை கொடுத்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செயற்பொறியாளர் மனோகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து மனோகரன் கூறியது:
பகுதி 6-ல் 8 வீடுகளுக்கும், பகுதி 7-ல் 42 வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பகுதி 6-ல் உள்ள 8 வீடுகளுக்கு 46 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் ஒசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குலுக்கல் முறையில் ஒதுக்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் பகுதி 7-ல் 42 வீடுகளுக்கு 42 விண்ணப்பங்கள் வந்துள்ளதால் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.