Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குறைந்த வருவாய் பிரிவினருக்காக நகரங்களில் புதிய வீட்டு வசதி திட்டம்

Print PDF

தினகரன் 10.06.2010

குறைந்த வருவாய் பிரிவினருக்காக நகரங்களில் புதிய வீட்டு வசதி திட்டம்

பெங்களூர், ஜூன் 10: நகர்ப் புறங்களில் வசிக்கும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள் உள் ளிட்ட குறைந்த வருவாய் பிரிவினருக்கு 1 லட்சம் வீடுகள் அளிக்கும் புதிய வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணியநாயுடு தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று கட்டா சுப்பிரமணியநாயுடு அளித்த பேட்டி: நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி, பூ வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட குறைந்த வருவாய் பிரிவினருக்காக "பாக்யா சம்பதா யசஷு" என்ற பெயரில் புதிய வீட்டுவசதி திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ராஜிவ¢காந்தி வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இத்திட்டம் செயல்படும்.

இத்திட்டத்தின்படி 325 சதுர அடி, 375 சதுர அடி, 450 சதுர அடியில் மூன்றுவகையான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பரப்பளவின் அடிப்படையில் இதன் பெயர்கள் முறையே பாக்யா, சம்பதா, யசஷு என்று அழைக்கப்படும். ஒவ்வொரு வீடுகளின் மதிப்பு அவற்றின் பரப்பளவின் அடிப்படையில் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் வரையிலும் இருக்கும். இதற்காக பெங்களூரில் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளது. பாக்யா பெயரிலான 325 சதுர அடி வீடுகளிலும், சம்பதா பெயரிலான 375 சதுர அடி வீடுகளிலும் ஒரு படுக்கையறை மற்றும் ஒரு படிப்பு அறை இருக்கும். யசஷு பெயரிலான 450 சதுர அடி பரப்புள்ள வீடுகளில் 2 படுக்கையறை இருக்கும்.

இத்திட்டத்திற்கான மாதிரி கட்டிடம் ஹெப்பால் அருகேயுள்ள சிக்கநாயக்கனஹள்ளியில் கட்டப்பட்டுவருகிறது. 1 மாதத்தில் மாதிரி வீடுகள் கட்டும் பணி முடிந்துவிடும். முதல்கட்டமாக 1 லட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வீடுகள் வினியோகிக்கப்பட உள் ளன. இத்திட்டத்தில் வீட்டுக்கு ரூ.50 ஆயிரத்தை மானியமாக அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள் ளது. மேற்கூறிய அனைத்து வீட்டுவசதி திட்டங்களும் ஏப்ரல் மாதத்திற்குள் முடி வடையும். ஏப்ரல் முதல் வீடுகள், நிலங்கள் வினி யோகிக்கப்படும். இவ்வாறு கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரி வித்தார்.

 

குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: பட்டா கிடைக்காததால் திரும்பிப் போகும் நிதி!

Print PDF

தினமணி 09.06.2010

குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: பட்டா கிடைக்காததால் திரும்பிப் போகும் நிதி!

புதுக்கோட்டை: மத்திய அரசின் ஒருங்கிணைந்த குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சியில் பெறப்பட்ட நிதி, குடிமனைப் பட்டா கிடைக்காததால், திருப்பி அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நகர்ப் புறங்களில் வறுமைக்கோட்டு கீழ் வசிக்கும் ஏழைகளின் குடிசைப் பகுதிகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஒரு பயனாளிக்கு 100 சத மானியத்தில் ரூ.72 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதில் மத்திய அரசு 90 சதமும், மாநில அரசு 10 சதமும் பங்களிப்பு செய்கின்றன.

பயன்பெறத் தகுதி மற்றும் நிபந்தனைகள்:

முறையான பட்டாவுடன், குடிசை வீட்டில் வசிப்பவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வசிக்கும் பகுதி அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத குடிசைப் பகுதியாகவும் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 14 குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அதில் 2030 பயனாளிகளைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டுக்காக ரூ.16.24 கோடி, உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக ரூ.8.50 கோடி உள்பட மொத்தம் ரூ.24.74 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

நகராட்சி நிர்வாக ஆணையம் மூலம் முதல் தவணையாக ரூ.11.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ.8 கோடி பெறப்பட்டது.

2030 பயனாளிகளில், அரசின் நிபந்தனைகளுக்கு உள்பட்டு 625 பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பணி ஆணை அளிக்கப்பட்டு, 432 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 193 வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை.

மீதமுள்ள 1405 பயனாளிகளில், வருவாய்த் துறையினரால் 9(2) எனும் பட்டா அளிக்க முன் தகுதி கடிதம் பெற்ற 1110 பேருக்கு பட்டா கிடைக்காததால், இவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், 195 பேர் கல்குவாரி புறம்போக்கு, 42 பேர் வாடகைக் குடியிருப்பு, 35 பேர் சாலை புறம்போக்கு, தனிப் பட்டா இன்றி கூட்டுப் பட்டாவில் வசிப்போர் 23 எனக் கண்டறியப்பட்டதால், இவர்களும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாமல் போனது.

2007-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட இந்தத் திட்டம் சுமார் 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைக்கு மாறாக பட்டா இல்லாத வீடுகளுக்கு 6 மாத காலத்துக்குள் பட்டா அனுமதி பெற்று பணி தொடங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தேர்வு பட்டியலில் உள்ள 60 சதத்தினருக்கு பட்டா கிடைக்காததால், இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டில் 70 சதம் செலவழித்தால்தான் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு பெற முடியும் என்ற நிலையில், 1405 வீடுகளுக்கு பட்டா இல்லாததால், முதல் தவணையில் பெறப்பட்ட நிதியில் ரூ1.12 கோடியை அரசுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் தவணையைப் பெற வாய்ப்பில்லாமல் போனது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:

அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகள், 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா அளிக்கலாம் என்ற நிலையை 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும் என தமிழக அரசு தளர்த்தியுள்ளது. ஆனால், அனைவருக்கும் குடிமனைப் பட்டா அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேறத் தடையாக இருப்பது வருவாய்த் துறையினரால்தான். இதைக் கண்டித்து எங்கள் இயக்கம் விரைவில் போராட்டம் நடத்தும் என்றார் அவர்.

 

குடிசைப்பகுதி மேம்பாடு பணி மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர் 07.06.2010

குடிசைப்பகுதி மேம்பாடு பணி மாநகராட்சி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

திருச்சி: ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் 19.96 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாநகர் பகுதியில் 1,208 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட நான்கு கோட்டங்களிலும் 36 அங்கீகரக்டக்கப்பட்ட குடிசைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 19.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1208 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 1147 குடிசை வீடுகளுக்கு பதிலாக ஆர்.சி.சி., கூரையிலான வீடுகளும், 61 ஓடு, கல்நார் கூரையிலான வீடுகளில் அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றுக்கு மத்திய, மாநில அரசு மான்யம், மாநகராட்சி பொதுநிதி பயனாளிகள் பங்களிப்பு போன்ற நிதியாதாரத்துடன் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 1,147 வீடுகள் 14.91 கோடி மதிப்பீட்டிலும், மேலும் அபிவிருத்துடப் பணிகள் நடைபெற்று வரும் வீடு ஒன்றுக்கு மத்திய, மாநில அரசு மான்யம் மாநகராட்சி பொதுநிதி பயனாளிகள் பங்களிப்பு போன்ற நிதியாதாரத்துடன் தலா 40 ஆயிரம் மதிப்பீட்டில் 61 வீடுகள் 24.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 15.15 கோடி மதிப்பீட்டில் 1208 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதவிர மேற்குறிப்பிட்ட குடிசைப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வதற்கு 4.8 கோடி மதிப்பீட்டிலும் சேர்த்து 19.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.அதன்படி, கோ.அபிஷேகபுரம் கோட்டம் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப் பகுதியான கல்நாயக்கன் தெருவில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியினை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

பாண்டமங்கலம் பகுதியில் 8.85 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் உடற்பயிற்சி மையம், மழைநீர்வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, புதியகாலனி பகுதியில் 3.15 லட்சத்தில் மழைநீர்வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அஐமக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குழுமணி சாலையில் 75 லட்சம் செலவில் காசிவிளங்கி பாலம் விரிவாக்கப்பணி, லிங்கநகரில் 55 லட்சம் ரூபாயில் 360 மீட்டர் தூரம் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர்வடிகால் மற்றும் குடிநீர் குழாய் விநியோக இணைப்புகள் செல்ல ஏதுவாக தனித்தனி கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.ஆய்வின்போது, செயற்பொறியாளர் சந்திரன், கோட்டத்தலைவர் அறிவுடைநம்பி, கவுன்சிலர் தங்கராஜ், திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர் நாகேஷ் உள்பட பலர் உடனிருந்தனர

 


Page 31 of 69