தினமலர் 21.05.2010
முருகன் கோவில் வளாகத்தில் ரூ.5.50 லட்சத்தில் காட்சி கோபுரம்
மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் காட்சி முனை கோபுரம் அமைக்க, சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழ்ந்துள்ள மஞ்சூரில், பென்ஸ்டாக், அவலாஞ்சி, அப்பர்பவானி, அன்னமலை முருகன் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடைசீசனில், ஊட்டி, குன்னூர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் பலர், மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளையும் பார்வையிட வருகின்றனர்.
மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் தரிசிக்கவும், இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கவும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; வருவோர் வசதிக்காக, கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் அன்னமலை முருகன் கோவிலில் காட்சி முனை கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; 3 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம், காட்சி முனைக்கு செல்ல வசதியாக 2.5 லட்சத்தில் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, பூமி பூஜை நடத்தப்பட்டது.