தினகரன் 02.06.2010
திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
திருவண்ணாமலை,ஜூன் 2: திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த 2006ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 21 வார்டுகளில் 47.60 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.37.87 கோடி செலவில் முதற்கட்ட திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதன் மூலம் 12 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதுவரை 40.50 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆழ்துளை கிணறுகள், கழிவு நீரேற்றும் நிலைய பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. 75 சதவீத வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
இப்பணிகளுக்காக இதுவரை ரூ.17.11 கோடி செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் வருகிற ஜனவரி 2011க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நேற்று கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
மணலூர்பேட்டை சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையம், கல்நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பைப்லைன் அமைக்கும் பணிகள், வேட்டவலம் சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, நகராட்சி தலைவர் இரா.திருமகன், துணை தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முருகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆர்.ரகுபதி, ஏ.பெருமாள், நகராட்சி கவுன்சிலர் இல.குணசேகரன் மற்றும் துரைவெங்கட் ஆகியோர் உடனிருந்தனர்.