தினமணி 14.06.2010
குற்றாலத்தில் துப்புரவுப் பணிகளுக்காக ரூ. 25 லட்சத்தில் 8 ஆட்டோக்கள்
தென்காசி,ஜூன்13: குற்றாலத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு உடனுக்குடன் குப்பைகளை அகற்ற 8 ஆட்டோக்களை வீ. கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தொடக்கிவைத்தார்.
இங்கு சீசனின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் ஆங்காங்கு குப்பைகள் சேர்ந்துவிடாமல் உடனுக்குடன் அகற்றும் வகையில் மத்திய அரசின் சுற்றுலா நிதியிலிருந்து,திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் ரூ. 25 லட்சத்தில் 8 டிப்பர் ஆட்டோக்கள் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வாங்கப்பட்டன. இவற்றை தென்காசி எம்எல்ஏ வீ. கருப்பசாமிபாண்டியன் கொடியசைத்து பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் பா. ராமையா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடசேன், குற்றாலநாதர் கோயில் அறங்காவலர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.