தினகரன் 21.06.2010
தெற்கு டெல்லியில் ரூ.1.87 கோடி செலவில் நவீன சமுதாய கூடம்
புதுடெல்லி, ஜூன் 21: தெற்குடெல்லியில் ரூ.1.87 கோடி செலவில் நவீன சமுதாய கூடம் கட்டுவதற்கான அடிக்கல்லை மேயர் பிருத்விராஜ் சகானி நேற்று நாட்டினார்.
தெற்கு டெல்லி சிராக் பகுதியில் நவீன சமுதாய கூடம் கட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்காக மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1.87 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நவீன சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் மல்கோத்ரா, மேயர் சகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிம் மேயர் பிருத்விராஜ் சகானி பேசியதாவது:
வீட்டுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் எந்த வருமானமும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதத்தில் இந்த சமுதாய கூடம் கட்டப்படுகிறது. ஒரு ஆண்டுக்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும். லட்சக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்த சமுதாய கூடம் பயன்படும்.
இவ்வாறு பிருத்விராஜ் சகானி கூறினார். அதன்பிறகு அடிக்கல்லை அவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவும் நாட்டினர்.