Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு பாதாள சாக்கடை திட்டத்தில் பயன்படுத்தும் தரமற்ற குழாய் விசாரணைக்கு அதிரடி உத்தரவு

Print PDF

தினகரன் 22.06.2010

குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு பாதாள சாக்கடை திட்டத்தில் பயன்படுத்தும் தரமற்ற குழாய் விசாரணைக்கு அதிரடி உத்தரவு

பாதாள சாக்கடை திட்டதிற்கான தரமற்ற மண் குழாய்களின் உடைந்து போன பாகங்களை ஆட்சியர் சுடலைகண்ணன் பார்வையிட்டு, அவைகளை பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்து அதன் தன்மையை பரிசோதனை செய்து விரைவில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தில் மற்ற பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள குழாய்கள் குறித்தும் ஆய்வு செய்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு, ஜூன் 22:ஈரோடு

மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் தரமற்ற மண் குழாய்களை பயன்படுத்துவதாக வரிசெலுத்துவோர் சங்கத்தினரும் கவுன்சிலரும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடைந்து போன மண்குழாய்களின் தன்மையை சோதனை செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், சூரம்பட்டி, பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம் நகராட்சி பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் துவங்கியது. இப்பணிக்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு தொகையாக பெறவும், இத்திட்டத்திற்கு சதுரஅடி என்ற அடிப்படையில் டெபாசிட் கட்டணமும், பராமரிப்பு கட்டணமும் வசூலிப்பது எனவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பொதுமக்களிடம் இருந்து பங்குத்தொகை பெற கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தபோதிலும் அதை யும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் சூரம்பட்டி, பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம் நகராட்சி பகுதிகளில் பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வரும் நிலையில் தற்போது பாதாள சாக்கடை பணிக்கு தரமற்ற 8 அங்குலம் அளவுள்ள மண்குழாய்களை பயன்படுத்தி வருவது அம்பலமாகி உள்ளது.

இந்த மண் குழாய்கள் தரமற்று இருப்பதுடன், இதன்வழியாக கழிவுநீர் எளிதில் செல்லாமல் நீர்க்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இவை வெகுவிரைவில் உடைந்து விடும் தன்மை கொண்டதாக உள்ளது எனக்கூறியும் மாநகராட்சி கவுன்சிலர் ராதாமணிபாரதி தலைமையில் வரிசெலுத்துவோர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் சுடலைகண்ணனிடம் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் தெரிவித்தனர். உடைந்து போன மண் குழாய்களை கையோடு எடுத்துச் சென்று ஆதாரமாக காட்டினர்.இதுகுறித்து கவுன்சிலர் ராதாமணிபாரதி கூறியதாவது:

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தரமற்ற முறையில் நடந்து வருகிறது. தற்சமயம் மாநகராட்சிப் பகுதியிலும், சூரம்பட்டி நகராட்சி சுத்தானந்தன் நகர், சங்குநகர், பெரியசேமூர் நகராட்சிக்குட்பட்ட சூளை போன்ற பகுதிகளிலும் 8 அங்குலம் அளவுள்ள மண்குழாய்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் கழிவுநீர் செல்வதற்கு பூமிக்கு அடியில் பீங்கான் அல்லது பிவிசி குழாய்களே பதிக்கப்படும். இவை நீண்ட நாட்களுக்கு உடையாமல் பாதுகாப்புடன் இருப்பதுடன், குழாயை விட்டு கழிவுநீர் வெளியேறாமல் சாக்கடையில் கலக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் தற்போது மாநகராட்சி நிர்வாகத்தால் பயன்படுத்தும் 8 அங்குலம் அளவுள்ள குழாய்கள் அனைத்தும் மண்குழாய்கள் தான். இவை பார்ப்பதற்கு பீங்கான் குழாய் போன்று இருக்கும். ஆனால் கையால் அழுத்தினாலே இந்த குழாய் கள் உடைந்து விடுகிறது. இவற்றை பூமிக்கு அடியில் புதைக்கும் போது எளிதில் உடைந்து விடும். இப்போதே பெரியசேமூர், சூளை, சூரம்பட்டி பகுதிகளில் போடப்பட்டுள்ள இவ்வகை குழாய் கள் உடைந்து சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல் ரோட்டில் ஓடுவதால் பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தரமற்ற முறையில் நடந்து வருகிறது. செப்டிக் டாங்க் தண்ணீர் மட்டுமே பாதாள சாக்கடைக்கு செல்லும் வகையில் குழாய் பதிப்பதால் எவ்வித நன்மையும் ஏற்படாது. இதுமட்டுமின்றி தற்போது பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 12 அங்குலம் கொண்ட பீங்கான் குழாயை பயன்படுத்தினால் நீண்டநாட்களுக்கு மக்கள் பயன் பெறுவார்கள்.

ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொதுமக்களிடமிருந்து குடியிருப்புகளுக்கு ரூ.7500 முதல் 18 ஆயிரம் வரை, வணிக நிறுவனங்களுக்கு ரூ.7500 முதல் ரூ.90 ஆயிரம் வரையிலும் டெபாசிட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுபோக ஒவ்வொரு வீடு, கடைகளுக்கும் மாதந்தோறும் பராமரிப்பு கட்டணம் ரூ. 150 முதல் 1250 வீதம் செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது.

இத்திட்டத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மக்களை வற்புறுத்தாமல் மத்திய, மாநில அரசுகளின் மானிய தொகையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.