தினகரன் 30.06.2010
பழுதான சாலையை சீரமைக்க ரூ.1.1 கோடியில் நவீன இயந்திரம்
புதுடெல்லி, ஜூன் 30: பள்ளங்களை மூடி சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.1.1 கோடி மதிப்பிலான நவீன இயந்திரம் ஒன்றை மாநகராட்சி வாங்கியுள்ளது.
டெல்லியில் அக்டோபர் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதனால் நவீன சாலைகள் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை டெல்லி மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளின் நடுவே பெரிய பள்ளங்கள் உள்ளன. அவற்றை சீரமைக்க இங்கிலாந்து நாட்டில் இருந்து ரூ.1.1 கோடி மதிப்பில் ஒரு நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
அந்த இயந்திரம் மூலம் சாலையில் உள்ள பள்ளத்தை 30 நிமிடங்களுக்குள் சரிப்படுத்தி சாலையை சீரமைக்க முடியும். இயந்திரத்தின் மூலம் சாலையை சீரமைக்கும் பணி மோதி நகரில் அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது,‘ இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்து, திருப்தி ஏற்பட்டால், மேலும் பல இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.