தினமணி 21.07.2010
பாதாளச் சாக்கடையில் தூர்வாரும் இயந்திரம் திருப்பூர் மாநகராட்சியில் தயார்
திருப்பூர், ஜூலை 20: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடை திட்டத்தில் ஏற்படும் அடைப்புகளை தூர்வார ரூ. 12 லட்சம் மதிப்பில் 2 இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாட்டை மேயர் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
÷திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் தற்போது 37 வார்டுகளில் மட்டும் பாதாளச் சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய ஆங்காங்கே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
÷அடைப்பு ஏற்படும் சமயங்களில் அக் குழாய்களின் வழியே ஆட்கள் இறங்கி சரிசெய்யும் நிலை இருந்து வந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை அடுத்து, அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று மாநகராட்சிக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
÷அதன் அடிப்படையில், மொத்தம் ரூ. 12 லட்சம் மதிப்பில் பாதாளச் சாக்கடையில் தூர்வாரும் இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களுக்கு அரசு 100 சதவீதம் மானியம் வழங்கியுள்ளது. இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கிக் காட்டப்பட்டது.
÷இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை மேயர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார். ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாநகர நல அலுவலர் கே.ஆர்.ஜவஹர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.