தினமணி 12.08.2010
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரிகளுக்கு கடைகள்
மதுரை, ஆக. 11: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரிய மனுவை, மதுரை மாநகராட்சி 30 நாள்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வாழை இலை கமிஷன் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு:
பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் கமிஷன் அடிப்படையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கென கடைகள் அங்கு ஒதுக்கப்பட்டு, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. எங்கள் சங்கத்தில் 19 பேர் உறுப்பினர்களாக உள்ளோம்.
சென்ட்ரல் மார்க்கெட் இடநெருக்கடி காரணமாக, மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட உள்ளது. எங்களுக்கு அங்கு மேற்குப் பகுதியில் கடைகளை ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தோம். அதில் நடவடிக்கை இல்லை.
மேற்குப் பகுதி கடைகள் வேறு வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பகுதி கடைகளுக்கு முன்பணமான ரூ.60,000 பெற்றுக்கொண்டு, வாழை இலை வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், மனுதாரர்கள் ஏற்கெனவே அளித்துள்ள மனுவை 30 நாள்களுக்குள் மதுரை மாநகராட்சி ஆணையர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.