தினமணி 12.08.2010
சிந்தாமணியில் விரைவில் திருமண மண்டபம்: மாநகராட்சி கமிஷனர்
மதுரை, ஆக.11: மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி சார்பில் விரைவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என, கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.
மாநகராட்சி மண்டலத்துக்கு உள்பட்ட 44 முதல் 59 வரையிலான வார்டுகளின் மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் கோ.தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் செபாஸ்டின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், குடிநீரில் சாக்கடை கலப்பதை சரி செய்தல், பாதாளச் சாக்கடை அமைத்தல், தெரு விளக்கு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கிழக்கு மண்டலம் சார்பில் சிந்தாமணி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் திருமண மண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கட்டப்படும் என கமிஷனர் தெரிவித்தார். முகாமில் மண்டல அதிகாரிகள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.