தினமலர் 18.08.2010
திண்டுக்கல் பாதாள சாக்கடை பணி முடிக்க தாமதம்
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் திட்டமிட்டபடி பாதாள சாக் கடை பணியை முடிப்பதில் தாமதம் நீடிக்கிறது.மார்ச் 31-க்குள் பாதாள சாக்கடை திட்டபணி முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பல தெருக்களில் குழாய் பதிக்கும் பணியே முடியவில்லை. இன்றைய நிலை நீடித்தால் திட்டம் நடைமுறைக்கு வர பல மாதங்களாகும் அபாயம் உள்ளது.
காரணம் என்ன: திண்டுக்கல் நகரில் பல இடங்களில் ரோட்டிற்கு அடியில் பாறைகள் உள்ளன. இதனால் எந்திரங்கள் மூலம் குழிதோண்டினாலும் குழாய்களை பதிக்க முடிய வில்லை. இதனால் பாறைகளை வெடி வைத்து தகர்க்க வேண்டியுள்ளது. இதனால் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய பணி, ஒரு மாதம் வரை நீடிக்கிறது. பாதாள சாக்கடை பணியில் பொதுவாக வெளியூர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் அடிக்கடி விடுமுறை எடுத்துவிடுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையும் பணி தாமதத்திற்கு காரணம் என நகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.