தினகரன் 31.08.2010
ஏற வேண்டிய சிரமம் இல்லை 7 இடத்தில் லிப்டுடன் நடைமேம்பாலம்
சென்னை, ஆக. 31: மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் ரூ5 கோடியே 70 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் தாலுகா ஆபீஸ் சாலையில் கட்டப்படும் லிப்டுடன் கூடிய நடைமேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நுங்கம்பாக்கம், ஸ்டர்லிங் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள லிப்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை துணை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே திறந்து வைத்துள்ளார்.
இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, முதியவர்கள், பெண்கள் சாலையை கடக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் லிப்ட் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
ராயபுரம் பீச் ரயில் நிலையம் அருகே ரூ70 லட்சத்திலும், எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இர்வின் சாலையில் ரூ90 லட்சத்திலும், பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில்
ரூ80 லட்சத்திலும், அடையார் துர்காபாய் தேஷ்முக் சாலையில் ரூ80 லட்சத்திலும், வாலாஜா சாலை & பெல்ஸ் சாலை சந்திப்பில் ரூ80 லட்சம், வாலாஜா சாலை & காயிதே மில்லத் சாலை சந்திப்பில் ரூ80 லட்சத்தில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இப்படி 7 இடங்களில் ரூ5 கோடியே 70 லட்சம் செலவில் லிப்ட் நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது.
சைதாப்பேட்டையில் ரூ90 லட்சம் செலவில் லிப்ட் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.