தினமலர் 03.09.2010
குப்பை சேகரிக்கும் வண்டி பணியாளரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பை சேரிக்கும் வண்டி வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. குப்பை சேகரிக்கும் வண்டியை நகராட்சி தலைவர் ராஜா துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள நகர மக்களின் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை சேகரித்து பெரம்பலூர் அருகிலுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கில் சேகரிக்க உள்ளது.
அதனடிப்படையில் தற்போது எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பது குப்பை சேகரிக்கும் வண்டி நான்கு லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வண்டி மூலம் நகராட்சி துப்புரவு பணியாளர் மக்களின் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க உள்ளனர். இந்த வண்டியில் உள்ள பச்சை பெட்டியில் மக்கும் குப்பையும், சிகப்பு பெட்டியில் மக்காத குப்பையும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள இந்த வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் நகராட்சி ஆணையர் (பொ) கருணாகரன், துணை தலைவர் முகுந்தன், கவுன்சிலர்கள் கருணாநிதி, சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பணி மேற்பார்வையாளர்கள் ராகவன், கோபி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.