தினமணி 06.09.2010
கூடலூர் பேரூராட்சி புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை
பெ.நா.பாளையம்,செப்.5: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் 76.90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றிற்கான பூமி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடந்தன.
கவுண்டம்பாளையத்தில் தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தில் மிகுந்த இடப்பற்றாக்குறை நிலவுகிறது. பேரூராட்சிக்குச் சொந்தமான டிராக்டர் போன்ற வாகனங்கள் வேறொரிடத்தில் நிறுத்தப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சாமிசெட்டிபாளையத்தில் உள்ள நேருநகரில் 20 லட்சம் செலவில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இது தவிர கோவனூர் மெயின் ரோட்டிலிருந்து விஜயாநகர் வரை 12 லட்சத்திலும், சாமையன் நகரில் 6.80 லட்சம் செலவில் தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. பாரதி நகரில் 16 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்படுவதோடு, குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7 லடசம் செலவில் கான்கிரீட் சாலையும் போடப்படுகிறது.
சி.எஸ்.ஐ நகர் மற்றும் வெங்கடாசலபதி நகரில் 5 லட்சத்தில் புதிய ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டப்படுவதோடு, திருமலைநாயக்கன் பாளையத்தில் உள்ள மயானம் 9.50 லட்சத்தில் மேம்பாடு செய்யப்படுகின்றது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்த 50 லட்சம் போக மீதமுள்ள தொகை பேரூராட்சியின் பொதுநிதியின் மூலம் செலவிடப்படுகிறது.
இப்பணிகளுக்கென நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கே.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுந்தரராஜன், செல்வராஜ், மருதாசலம், செல்வி மற்றும் அலுவலக எழுத்தர் நசீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.