தினமணி 23.09.2010
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை
திருப்பத்தூர்,செப்.22: திருப்பத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு இடங்களிலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டு இடங்களிலும் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கான பூமி பூஜையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். காளியம்மன் கோயில் அருகிலும் வாரச் சந்தை அருகிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் தொடங்கப்படவுள்ளது.
சிவகங்கை சாலையில் உரக்கிடங்கு அருகிலும், தென்மாபட்டு அட்டக்குளம் அருகிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கிடவும் விவசாயத்துக்கு கழிவுநீரை சுத்திகரித்து நல்ல நீரை வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஓப்பந்தம் கடந்த மாதம் புதுதில்லியில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா முன்னிலையில், வாட்டர் சிஸ்டம்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இப்பணியை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளைத் தொடக்கு வதற்கான பூமி பூஜையை புதன்கிழமை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் என்.எம்.சாக்ளா, துணைத் தலைவர் கார்த்திகேயன், இளம் விஞ்ஞானி பஞ்சாட்சரம், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா, கவுன்சிலர்கள் முருகானந்தம், சரவணப்பெருமாள், கவிதாகுமார், சுப்புலெட்சுமி, பதிகண்ணன், காளிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டம் ஓராண்டில் முடிக்கப்பட்டு பின்பு ஓராண்டுவரை வாட்டர் சிஸ்டம் இண்டியா நிறுவனத்தின் பராமரிப்பிலும், பின்னர் பேரூராட்சி வசம் ஓப்படைக்கப்படும். இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கும், விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரும் கிடைக்கும். செயல் அலுவலர் அமானுல்லா நன்றி கூறினார்.