Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு யார் பொறுப்பு? அறிவியல்பூர்வமாக செய்யப்படுகிறதா?

Print PDF

தினமலர் 24.09.2010

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு யார் பொறுப்பு? அறிவியல்பூர்வமாக செய்யப்படுகிறதா?

மதுரை : மதுரையில் நடக்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, அறிவியல்பூர்வமாக செய்யப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட நகரங்களில், திறவை சாக்கடைகள் மூடப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், மழை நீர் செல்ல வழி இருக்காது. இதற்காக மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மதுரை உள்பட 63 நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெரும்பகுதி நிதியை மத்திய அரசு தருகிறது.

மதுரையில் நிலை என்ன?: மதுரையில் இத்திட்டம், அறிவியல்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாக்கடையில் கலந்து, வீணாகும் மழைநீரை, நிலத்தடிக்குள் செலுத்தி, அதன் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் மதுரையில் இத்திட்டம் நிறைவேறும் முறையை பார்த்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பே இல்லை. கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டதுமே, அடியில் கான்கிரீட் முதலில் போடப்படுகிறது. அதன் பிறகு, காங்கிரீட் தடுப்புகள் கட்டப்பட்டு, மூடி அமைக்கப்படுகிறது. இதெல்லாம் சரி தான். கால்வாய் தரையில் கான்கிரீட் போட்டால், மழைநீர் எப்படி பூமிக்குள் இறங்கும் என்பது தான் நிபுணர்களின் கேள்வி. அற்குப் பதில், கால்வாய் தரையில் ஜல்லி, கூழாங்கற்களை போட்டு வைத்து, தடுப்புடன் மூடி விட்டால், பூமிக்குள் மழைநீர் இறங்க வாய்ப்பு ஏற்படும். அதன் பிறகு, அதிகப்படியாக வரும் தண்ணீர் மட்டும், கால்வாயில் ஓடத்துவங்கும். இதைச் செய்யாமல், கால்வாய் தரையில் கான்கிரீட் போடுவதால் ஒரு பயனும் இல்லை என பெயர் குறிப்பிட விரும்பாத நிபுணர்கள் கூறுகின்றனர்.

265 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் இத்திட்டம், மழைநீரை சேகரிக்காது என்பது, மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைத் தான் காட்டுகிறது. அது மட்டுமல்ல, பல தெருக்களில் சாலையைவிட, மழைநீர் வடிகால், அதிக உயரமாக இருக்கிறது. மழைநீர் வடிகாலுக்கு செல்ல முடியாமல், மீண்டும் மீண்டும் தெருக்களில் தேங்கி, பழைய நிலைமையே ஏற்படுகிறது. இதனால் திட்டத்தின் நோக்கமே பாழ்படுகிறது. வடிகால்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி, பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.

சாலைகள் எப்போதுமே, நடுவில் உயர்ந்து ஓரங்களில் சரிந்தும் இருக்க வேண்டும். அப்போது தான், மழைநீர் தெருவில் தேங்காமல், ஓரத்திற்கு ஓடி, மழைநீர் வடிகாலுக்கு செல்லும். இப்படி இல்லாமல், பல தெருக்கள், நடுவில் பள்ளமாகவும் ஓரங்களில் மேடாகவும் அமைக்கப்படுகின்றன. எந்த அறிவியல்பூர்வமான விஷயமும் பின்பற்றப்படுவதில்லை.

யார் பொறுப்பு?: இதுபோன்ற திட்டம், நிறைவேற்றப்படுவதற்கு யார் பொறுப்பு? திட்டத்தை வடிவமைத்தவர்கள் பொறுப்பா? இதை அங்கீகரித்த மத்திய அரசு அதிகாரிகள் பொறுப்பா? அதை வழிமொழிந்த தமிழக அரசு அதிகாரிகள் பொறுப்பா? திட்டத்தை அப்படியே கண்களை மூடி, பின்பற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பா?