தினகரன் 27.09.2010
திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வருமா?
ஆவடி, செப். 27: திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநின்றவூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, கோமதிபுரம், ராமதாசபுரம், பெரிய காலனி, திருவேங்கட நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர், கன்னிகாபுரம், சுதேசி நகர், தாசர்புரம், முருகேசன் நகர், லட்சுமிபுரம், பிரகாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவை அடிக்கடி நிரம்பி விடுவதால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கழிவுநீர் தொட்டியில் அடைப்பை நீக்கவும், கழிவுநீரை அப்புறப்படுத்தவும் ரூ700 முதல் ரூ900 வரை செலவாகிறது.
அப்படியே கேட்கும் தொகையை தர வீட்டு உரிமையாளர்கள் தயாராக இருந்தாலும் கழிவுநீர் லாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. இதனால், சாலையில் கழிவுநீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
எனவே, திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி கொண்டு வந்தால் கழிவுநீர் அகற்றும் பிரச்னை இருக்காது. சுகாதார கேடுகளும் தடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திருநின்றவூர் பேரூராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.