தினகரன் 28.09.2010
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் வாகன பார்க்கிங் வசதி தேவை
வாலாஜாபாத், செப் 28: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் சைக்கிள், பைக் மூலம் வாலாஜாபாத் வந்து, தங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பஸ் மூலம் செல்கின்றனர்.
வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த வசதி இல்லை. அருகில் உள்ள கடைகள் முன்பு வாகனத்தை நிறுத்துகின்றனர். இரவு நேரத்தில் திரும்பிவர தாமதமானால் வாகனம் என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்துதரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.