தினகரன் 29.09.2010
தயாநிதி மாறன் தொகுதி நிதியில் உருவாகும் மேத்தா நகர் பாலத்துக்கு ரூ 1.87 கோடி ஒதுக்கீடு மாநகராட்சி தீர்மானம்
சென்னை, செப்.29: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் சூளைமேடு மேத்தா நகர் பாலத்துக்கு ரூ1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. பின் னர் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேத்தா நகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு & வெங்கடாசலபதி தெருவையும் இணைத்து பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பாலம் ரூ3.37 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த பணிக்காக, மாநகராட்சி மூலதன நிதியில் இருந்தும் ரூ1.87 கோடி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தவிர தென்சென்னைக்கு தேனாம்பேட்டையில் ஒன்றும், வடசென் னையில் தண்டையார்பேட்டையில் ஒன்றும் கடந்த நிதியாண்டில் புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு ஏழை மக்களிடம் நல்ல வர வேற்புள்ளது.
இதுபோன்ற பல் மருத்துவமனைகள் மேலும் தேவை என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.
அதன்படி, இளங்கோநகர்(வார்டு 36), செம்பியம் (51), டி.பி.சத்திரம் (69), புதுப்பேட்டை (82), நுங்கம்பாக்கம் (108), கோட்டூர்புரம் (138), வேளச்சேரி (153) ஆகிய 7 இடங்களில் பல் மருத்துவமனைகள் திறக்கப்படும். மிக பழமையான கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ3.92 கோடி செலவில் பழுது பார்க்கும் பணிக்கான அனுமதி வழங்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.