தினகரன் 04.10.2010
மேட்டூர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அண்ணா பெயர்
மேட்டூர், அக்.4: மேட்டூர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அண்ணா பெயர் சூட்டுவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தென நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் நகரமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காசிவிசுவநாதன், ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும் மேட்டூர் நகர்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக இரண்டு நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். எனவே, உடனடியாக உடைப்பை சரிசெய்து, குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய வேண்டுமென உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிட அரசிடம் அனுமதி கோருவது, 29வது வார்டில் ரூ7 லட்சம் செலவில் கான்கிரிட் சாலை, 8வது வார்டு இ.பி. காலனியில் ரூ1.9 லட்சம் செலவில் கான்கிரிட் சாலை அமைப்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.