தினமணி 08.10.2010
வால்பாறை நகராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு
வால்பாறை, அக்.7: வால்பாறை நகராட்சி அலுவலக புதிய கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதீப்பீட்டில் நகராட்சி அலுவலக கட்டடம், பூங்கா மற்றும் ஆய்வு மாளிகை கட்டப்பட்டன. புதிய கட்டடங்களை ஊரக தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத் றை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திறந்து வைத்தார். பின்னர், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் கணேசன் வரவேற்றுப் பேசினார்.
எம்.எல்.ஏ கோவை தங்கம் சிறப்புரையாற்றினார். தையல் இயந்திரம், சமையல் அடுப்பு, திருமண உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 1200 பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரவேலு, நகராட்சி துணைத் தலைவர் ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சி செயல் அலுவலர் ராஜகுமாரன் நன்றி கூறினார்.