தினமலர் 13.10.2010
குளித்தலை நகராட்சி மருத்துவமனை கட்ட ரூ.7 லட்சம் மதிப்பில் திட்டம் குளித்தலை: குளித்தலை நகராட்சியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டுமானப்பணி ஆய்வு செய்யப்பட்டது.குளித்தலை நகராட்சி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சி மருத்துவமனைக்கான கட்டுமானம் துவங்கியது. 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 15வது வார்டில் கட்டப்படும் பணியை நகராட்சி தலைவர் அமுதவேல், துணை தலைவர் பல்லவிராஜா, கமிஷனர் தனலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
புதிய மருத்துவமனை குறித்து நகராட்சி தலைவர் அமுதவேல் கூறியதாவது:
நகராட்சி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனை இல்லாத குறையை போக்க, 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டப்படுகிறது. மருத்துவமனையில் இரண்ட அறை, ஆறு படுக்கை வசதி அமைக்கப்படுகிறது. ஒரு டாக்டர், இரண்டு நர்ஸ், ஒரு லேப் டெக்னீசியன், இரண்டு உதவியாளர்கள், ஒரு மருந்தாளுநர் என ஏழு பேர் பணியில் இருப்பர். மருத்துவமனை கட்டுமானப்பணி விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதேப்போல் நகராட்சிக்குரிய அனைத்து திட்டங்களையும் அரசிடம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.