Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வணிக வளாக கடைகள் யாருக்கு ஒதுக்கீடு? மேயர் விளக்கம்

Print PDF

தினமணி 14.10.2010

மாநகராட்சி வணிக வளாக கடைகள் யாருக்கு ஒதுக்கீடு? மேயர் விளக்கம்

சென்னை, அக்.13: உண்மையான சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே மாநகராட்சியின் வணிக வளாக கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கான வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலும், பூங்கா ரயில் நிலையம் அருகிலும், விக்டோரியா அரங்கத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டி பஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத் தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கர்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தி ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டன.

ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சில புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு அலுவலர் மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 101 பேர்கள் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரியவந்துள்ளது.

அதேபோல பாண்டி பஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அலுவலர் மூலம் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கர்ஸ் கமிட்டி நீதிபதி ராமமூர்த்தி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

மீதமுள்ள கடைகள் அவரிடம் அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்கள் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் சேர வாய்ப்பு இல்லாத வகையில் உண்மையான பயனாளிகளுக்கு கடைகள் குறைபாடுமின்றியும், கால தாமதமின்றியும், உரிய வழிமுறைகளின்படி கிடைத்திட உரிய வழிவகைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.