தினகரன் 15.10.2010
அமைச்சர் தகவல் பல்லாவரம் மேம்பாலத்தை 29ல் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்
ஆலந்தூர், அக். 15: பல்லாவரம் மேம்பாலத்தை வருகிற 29ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்,
பல்லாவரம் நகராட்சி சார்பாக முதியோர் உதவித் தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி வழங்கும் விழா, கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சாட்டர்ஜி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் இ.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி தலைவர் துரைசாமி, பரங்கிமலை ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, நகராட்சி துணைத் தலைவர் கருணா முன்னிலை வகித்தனர். தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் சவுரிராஜன் வரவேற்றார்.
விழாவில், 510 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 299 பேருக்கு திருமண நிதியுதவி, 849 பேருக்கு மகப்பேறு நிதியுதவி உட்பட ரூ1 கோடியே 22 லட்சத்து 46 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
பல்லாவரம் நகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குரோம்பேட்டை ராதா நகரில் குறைந்த மின்னழுத்தத்தை போக்க ரூ8 கோடியில் 11 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், பல்லாவரத்தில் ரூ33 கோடி செலவில் 33 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவு பெறாத பகுதிகளில், விடுபட்ட பகுதிகளில் ரூ13.75 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி பல்லாவரம் மேம்பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ10 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளது. எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லாவரத்தில் உள்ள 42 வார்டுகளில் ரூ3 கோடியே 62 லட்சத்துக்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். பரங்கிமலை உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் வீரமணிகண்டன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, கவுன்சிலர்கள் முனுசாமி, சண்முகம், முருகையன், சிவகுமார், ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.