தினகரன் 19.10.2010
துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் விநியோகம்
சின்னமனூர்
, அக். 19: சின்னமனூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் 60 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் துப்புரவு பணிகளுக்கு தேவையான மண்வெட்டி, தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் பழுதாகி உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தன. இதனால் பொது சுகாதாரம் காப்பதில் பணியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தங்களுக்கு துப்புரவு பணிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ
.ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, துப்புரவு பணிகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டன.இந்த பொருட்களை நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி கூத்தபெருமாள் நேற்று துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு) வரதராஜன், சுகாதார ஆய்வாளர் ஜனகர், குழந்தைவேலு, கவுன்சிலர் சிவராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.