தினமலர் 19.10.2010
நகராட்சி பள்ளிக்கு: ரூ.ஒரு கோடியில் பிரமாண்ட கட்டடம்
ஆலந்தூர் : ஆதம்பாக்கத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக பிரமாண்டமாக ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம், கருணீகர் தெருவில் 70 ஆண்டுகளாக ஓடுகளால் அமைந்த ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கியது.இங்கு 800 மாணவ, மாணவியர் வரை பயின்றனர். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகளாகவும், ஆறாவது முதல் 8ம் வகுப்பு வரை மூன்று பிரிவுகளாகவும் இப்பள்ளி இயங்குகிறது.இப்பள்ளிக் கட்டடம் பாழடைந்ததால், தற்காலிகமாக ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் செயல்படுகிறது.இந்நிலையில், புதிதாக பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஆலந்தூர் நகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 1,362 சதுரடி நிலப்பரப்பில் கிழக்கு, மேற்கு என இரண்டு பிளாக்குகளிலும் 16 வகுப்பறைகள் கட்டப்பட்டன.இது தவிர பரிசோதனைக் கூடம், கூட்டரங்கம், நவீன கழிப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஊழியர்கள் அறை மற்றும் நாற்காலி, டேபிள்கள், மின்விசிறி, குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கு நிக ராக புதிதாக கட்டிய ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகள் ஒவ்வொன்றும் பரந்து விரிந்துள்ளன.ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட நடுநிலைப் பள்ளியை சமீபத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.