தினமலர் 21.10.2010
குற்றாலத்தில் ரூ.85 லட்சத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் துவக்கம்
தென்காசி : குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் ஜெயராமன், தென்காசி எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் திறந்து வைத்தனர். குற்றாலம் டவுன் பஞ்.,பகுதியில் மத்திய சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டவுன் பஞ்.,அலுவலகம் அருகே சுற்றுலா வரவேற்பு மையம் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஐந்தருவி பகுதியில் சுற்றுலா வரவேற்பு மையம் 13 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. வைரம்ஸ் நகரில் 7 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. புலியருவியில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. சிறுவர் பூங்கா 14 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவிலும், விஸ்வநாதராவ் பூங்கா 18 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்பட்டது.
இவற்றின் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராசையா முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயராமன் சுற்றுலா வரவேற்பு மையம், பூங்கா, நவீன கழிப்பிட கட்டடத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி ஆர்.டி.ஓ.சேதுராமன், டி.எஸ்.பி.ஸ்டாலின், சுற்றுலா அலுவலர், மாவட்ட கவுன்சிலர்கள் இசக்கி பாண்டியன், பரமசிவன், நகராட்சி சேர்மன்கள் தென்காசி கோமதிநாயகம், செங்கோட்டை ரகீம், தென்காசி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, கல்லிடைக்குறிச்சி இசக்கி பாண்டியன், தென்காசி நகர தி.மு.க.செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி பாலாமணி, குற்றாலம் டவுன் பஞ்.,பணி மேற்பார்வையாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.