Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரியலூரில் ரூ.27.50 கோடியில் பாதாள சாக்கடை

Print PDF
தினமலர் 21.10.2010

அரியலூரில் ரூ.27.50 கோடியில் பாதாள சாக்கடை

அரியலூர்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரசின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8,515 குடிசை வீடு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. அரியலூர் யூனியனில் 1,085 வீடுகளும், திருமானூர் யூனியனில் 1,357 வீடுகளும், செந்துறை யூனியனில் 890 வீடுகளும், ஜெயங்கொண்டம் யூனியனில் 1,575 வீடுகளும், ஆண்டிமடம் யூனியனில் 1,829 வீடுகளும், டி.பழூர் யூனியனில் 1,779 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் யூனியன் துளாரங்குறிச்சி பஞ்சாயத்து சூரியமணல் கிராமத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மருதம்பாள் என்ற பயனாளி தனது குடிசை வீட்டை கான்கிரீட் வீடா மாற்றம் செய்துள்ளார்.

இந்த வீட்டை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரியலூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள உள்கட்டமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி 12 மாற்றுத்திறனாளிக்கு 4,000 ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி மற்றும் சோலார் சார்ஜரும் வழங்கினார்.மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:அரியலூர் நகராட்சியில் அடிப்படை உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தில் 70 லட்சம் ரூபாய் மானியம், நகராட்சி பொது நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரியும் மக்களின் வசதிக்காக அரியலூர் பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தப்படுகிறது. அரியலூரில் 27.50 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும் தொடங்கப்படுகிறது. இதனால் 10ஆயிரத்து 400 குடியிருப்புவாசிகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி, டி.ஆர்.ஓ., பிச்சை, எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி (அரியலூர்), சிவசங்கர் (ஆண்டிமடம்), ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), நகராட்சி தலைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.