தினகரன் 22.10.2010
நவீன தொழில்நுட்ப முறையில் தொடக்கம் கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் ரூ4.74 கோடி செலவில் சீரமைப்பு
சென்னை, 22: கோடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பழுது பார்த்து சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கோடம்பாக்கம் நெடுஞ்சாலை&ஆற்காடு சாலையை இணைத்து ரயில் பாதையின் குறுக்கே கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பழமையான மேம்பாலம் தற்போது பழுதடைந்துள் ளது.
இதை பழுது பார்த்து சீரமைத்து அழகுபடுத்தும் பணி ரூ4.74 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான பணிகள் இன்று (நேற்று) முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் 623 மீட்டர் நீளம் கொண்டது. இருபக்க நடைபாதையுடன் சேர்த்து 12.80 மீட்டர் அகலம் கொண்டது. பாலத்தில் உள்ள தூண்கள் மற்றும் உத்திரங்கள் மைக்ரோ கான்கிரீட் பயன்படுத்தி பழுது பார்த்தும், வெட்ராப்பிங் முறையில் வலுவூட்டப்படும். பாலத்தில் பழுதடைந்துள்ள அனைத்து பியரிங்களை மாற்றுவதற்காக மேல் தளங்கள் சிறப்பு பளுதூக்கிகள் (ஜாக்கி) மூலம் உயர்த்தி பியரிங்கள் மாற்றப்படவுள்ளன. பழுதடைந்துள்ள ஸ்டிரிப் சீல் இணைப்புகள், மழைநீர் குழாய்களும் மாற்றப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.