தினகரன் 28.10.2010
ஒட்டன்சத்திரத்தில் ரூ.40 லட்சத்தில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை
ஒட்டன்சத்திரம், அக். 28: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 5, 6, 7 வார்டு பொதுமக்கள் ரயில்வே பாதையை கடந்து செல்ல வசதியாக ரூ.40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது.
விழாவிற்கு திண்டுக்கல் எம்பி சித்தன் தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலர் ஜோதீஸ்வரன், நகராட்சி துணை தலைவர் வனிதா ஆறுமுகம், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் முருகேசன், துணை தலைவர்கள் ராசியப்பன், சிவசுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் துரைச்சாமி, வேலுச்சாமி, ரயில்வே பொறியாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரன் நன்றி கூறினார்.
விழாவிற்கு முன்னிலை வகித்து அரசு தலைமை கொறடா அர.சக்கரபாணி பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின் போது, ஒட்டன்சத்திரம் நகராட்சி 5, 6, 7வது வார்டு மக்களுக்கு சுரங்கப்பாதை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
போக்குவரத்து வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் திமுக ஆட்சியில் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.2 கோடியில் பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.