தினமணி 28.10.2010
கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடி புதைசாக்கடை திட்டம் தொடக்கம்
கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடி மதிப்பில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார் (படம்).
புதைசாக்கடைத் திட்ட தொடக்க விழா, இலவச காஸ் வழங்கும் விழா நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக ஆவின் மேம்பாலம் அருகே 8 கோடி செலவில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் கழிவுநீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்பட்டு, ஏரிகள் மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும். கழிவுகள் எருவாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதல்கட்டமாக வார்டு 18 முதல் 33-வது வார்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகராட்சிக்கு சாலை மேம்பாட்டுக்காக தலா 1 கோடி, 800 பேருக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்புகளை எம்எல்ஏ டி.செங்குட்டுவன் வழங்கினார்.
எம்எல்ஏ கே.ஆர்.கே.நரசிம்மன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், நகராட்சி ஆணையர் எம்.இ.லோகநாதன், பர்கூர் ஊராட்சிமன்றத் தலைவர் வி.ஜி.இராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.