தினமலர் 29.10.2010
உப்பிடமங்கலம் டவுன் பஞ்.,ல் வணிக வளாகம் திறப்பு விழா
கரூர்: கரூர் அருகே உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிடம் திறப்புவிழா நடந்தது.
கட்டிடத்தை திறந்துவைத்து கலெக்டர் உமாமகேஸ்வரி பேசியதாவது: உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 2009-10ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 54.06 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. லட்சுமணப்பட்டியில் 10 லட்சம் மதிப்பில் தார் சாலை, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரச்சந்தையில் பஸ் நிறுத்தம் மற்றும் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டது.டவுன் பஞ்சாயத்து அலுவலகம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 2.76 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் தளம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் உள்ளிட்டபல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தில், வடுகப்பட்டி செல்லும் சாலை 10.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலையாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் லிங்கத்தூர் ஆரம்ப பள்ளி முதல் மயானம் வரையில் 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் ராஜேந்திரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜலிங்கம், தாந்தோணி யூனியன் துணை தலைவர் ரகுநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.